

ஐதராபாத்-சென்னை மற்றும் ஐதராபாத்-பெங்களூரு இடையே புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழியப்பட்ட அதிவேக புல்லட் ரெயில் வழித்தடங்களின் பணிகளில் முதல் கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டங்களின் வழித்தடத்தை அமைக்கும் களப்பணி தொடங்கி உள்ளது. ரங்காரெட்டியிலிருந்து நல்கொண்டா மற்றும் விகாராபாத் மாவட்டங்கள் நோக்கிய பாதையை அளவீட்டுக் குறியீடு அமைத்து வருகின்றனர்.
ஐதராபாத்- சென்னை வழித்தடமானது, ஷம்ஷாபாத் மகேஸ்வரம், கண்டுகூர் மற்றும் யச்சாரம் மண்டலங்கள் வழியாக நல்கொண்டா மாவட்டத்தின் நம்பள்ளி மண்டலத்தை நோக்கி அளவிடப்பட்டு வருகிறது.
முழுமையான ஆய்வுக்கு பிறகு வழித்தடம் முடிவு செய்யப்படுகிறது. அதற்கு பிறகு ரெயில் பாதை அமைக்கப்படும். புல்லட் ரெயில் மூலம் சென்னையிலிருந்து 3 மணி நேரத்தில் ஐதராபாத் செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.