சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி ரூ.769 கோடி வசூலானது

சொத்து வரி வசூலில் 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை முதலிடம் பிடித்துள்ளது.மணலி, திருவொற்றியூர் மண்டலத்தில் குறைந்த அளவில் ரூ.12 மற்றும் ரூ.10 கோடி வசூலாகி உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி ரூ.769 கோடி வசூலானது
Published on

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு முதல் ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த கடந்த 30-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த மாதம் முழுவதும் வருவாய் துறையினர் சொத்து வரி இலக்கை எட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

முதல் அரையாண்டிற்கான சொத்து வரியாக ரூ.769.01 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் வசூலிக்கப்பட்டதை விட அதிகமாகும். சொத்து வரி வசூலில் 15 மண்டலங்களில் தேனாம்பேட்டை முதலிடம் பிடித்துள்ளது.

அங்கு ரூ.144.45 கோடி வசூலானது. அதனை தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் ரூ.97.41 கோடியும் வசூலிக்கப்பட்டன. மணலி, திருவொற்றியூர் மண்டலத்தில் குறைந்த அளவில் ரூ.12 மற்றும் ரூ.10 கோடி வசூலாகி உள்ளது.

கடைசி நாளான 30-ந் தேதி மட்டும் ரூ.40 கோடிக்கு மேல் சொத்து வரியாக கிடைத்துள்ளது.

இதே போல தொழில் வரியாக ரூ.257 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள நபர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும்.

கடந்த நிதியாண்டில் வணிக நிறுவனங்களை நடத்தி வரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சொத்து வரி செலுத்தாமல் இருந்தனர். அதில் 60 சதவீதம் பேர் தற்போது சொத்து வரி செலுத்தி விட்டனர் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சொத்து வரி செலுத்தாமல் உள்ள உரிமையாளர்களுக்கு நேற்று முதல் 1 சதவீதம் தனி அபராதம் விதிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com