தண்டவாளத்தில் விரிசல்: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரெயில் சேவை பாதிப்பு

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிகளுக்கு செல்லும் மக்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ரெயில் சேவை பாதிப்பு
Published on

சென்னை புறநகர் மக்களின் வாழ்வாதாரமாகவும், பிரதான போக்குவரத்து சேவையாகவும் விளங்கும் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக இந்த வழித்தடத்தில் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டும், தாமதமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகள் கடும் அவதி

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கல்வி மற்றும் பணிகளுக்காக சென்னை நகருக்குள் வந்து செல்கின்றனர். இன்று திடீரென ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், வேலைக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ரெயில்கள் தாமதமானதால் நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதியது. பலர் மாற்று வழியின்றி பேருந்து நிலையங்களை நோக்கி படையெடுத்ததால் பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தகவல் அறிந்தவுடன் ரெயில்வேயின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேதமடைந்த தண்டவாளப் பகுதியை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com