ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது- 6 மீனவர்கள் தத்தளிப்பு

கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது. வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.
ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது- 6 மீனவர்கள் தத்தளிப்பு
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் ஜார்ஜியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ரஸ்டன் (வயது 50) மீனவர். இவருக்கு சொந்தமான வள்ளத்தில் இவரும், மற்ற 5 பேரும் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் வலை விரித்து நெத்திலி மற்றும் சாளை போன்ற மீன்களை பிடித்து விட்டு இன்று காலை 7.30 மணிக்கு கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது.

இதில் வள்ளத்தில் இருந்து 6 மீனவர்களும் கடலில் தவறி விழுந்தனர். அவர்கள் 6 பேரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த கரையில் மீன் இறக்கி கொண்டிருந்த மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி சென்றனர். பின்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அந்த 6 மீனவர்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

அதன்பிறகு கடலில் கவிழ்ந்து கிடந்த அந்த வள்ளத்தையும் அவர்கள் மீட்டனர். அதன் பிறகு அந்த 6 மீனவர்களையும் அந்த வள்ளத்தில் ஏற்றி பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.

இதேபோல கடந்த வாரம் கோவளத்தில் நடுக்கடலில் ஒரு வள்ளம் கவிழ்ந்து 5 மீனவர்கள் உயிருக்கு போராடியபடி தத்தளித்ததும் அவர்களை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மற்ற மீனவர்கள் உயிருடன் மீட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்போது கோவளத்தில் 2-வது முறையாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com