என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை, திருச்செந்தூர் கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    நெல்லை, திருச்செந்தூர் கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.
    • நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மேலும் கூடியது.

    நெல்லை:

    நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், மகளிா் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் வருவதற்கு தனி நுழைவு வாயில் உள்ளது. இதை தவிர கோர்ட்டுக்கான மெயின் நுழைவாயில் மற்றும் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் என மொத்தம் 3 வாயில்கள் உள்ளன. இந்த வாசல்களில் போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம்.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த நீதிமன்றத்திற்கு வந்து செல்வதால் எப்போதும் நீதிமன்ற வளாகம் பரபரப்பாகவே காணப்படும்.

    இங்கு இன்று காலை வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் தொடங்கிய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலின்பேரில், நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.

    நீதிபதியின் ஓய்வு அறைகள், நிர்வாக கட்டிடங்கள், கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் மூலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மேலும் கூடியது.

    ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி இதே போல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

    மேலும் சரியாக 12.20 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×