

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி திருவள்ளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செவ்வாய்ப்பேட்டை அரசு தொழில் நுட்ப கல்லூரியிலும், ஆவடி, மதுரவாயல், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருமாள்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியிலும், பூந்தமல்லி, அம்பத்தூர் மாதவரம் சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வைக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வளாகத்திலும் வயர்லெஸ் கண்காணிப்பு அறை மற்றும் நாசவேலை தடுப்பு குழுவால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட 24 மணிநேரமும் வட்டாட்சியர் நிலையில் 18 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் ஆகியோர் திடீர் தணிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து பகுதிகளும் 387 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தின் மேலே டிரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.