என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு தினம்- கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என்று மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இதேபோல காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர கோவை ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை போடப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






