ஜாபர்சாதிக் விவகாரம் - பலிகடாவாக்க முயற்சி: அண்ணாமலை

தி.மு.க. அரசு சிலிண்டர் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.உதயநிதி ஸ்டாலின் ஏன் ஜாபர் சாதிக் உடன் உள்ள போட்டோவை நீக்கி உள்ளார். இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பதில் சொல்ல வேண்டும்.
ஜாபர்சாதிக் விவகாரம் - பலிகடாவாக்க முயற்சி: அண்ணாமலை
Published on

ஆலந்தூர்:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லியில் உள்ள கட்சி தலைவர்களை சந்திக்க சென்று இருந்தார். இந்தநிலையில் இன்று காலை அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் மட்டும் பெண்களுக்கு சிறந்த நாள் இல்லை. வருடத்தில் அனைத்து நாளும் பெண்களுக்கு சிறந்த நாள் தான். பெண்கள் தான் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி அரசு பெண்கள் தினத்தை முன்னிட்டு, சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் தி.மு.க. அரசு சிலிண்டர் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதுவரை 100 ரூபாய் கூட குறைக்கவில்லை.

ஜாபர்சாதிக் தி.மு.க.வின் அயலக அணியில் இருந்து கொண்டு அதை வைத்து போதை பொருட்களை கடத்தி உள்ளார். இது குறித்து தி.மு.க. வினர்தான் பேச வேண்டும். ஆனால் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலை பேச வைத்து உள்ளனர். ஜாபர் சாதிக் விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யை பலிகடாவாக தி.மு.க.மாற்றி உள்ளது. இதே போல் தான் சைலேந்திரபாபுவை வைத்து கோவை குண்டுவெடிப்பில் சிலிண்டர் வெடிப்பு என்று பேச வைத்தனர். உதயநிதி ஸ்டாலின் ஏன் ஜாபர் சாதிக் உடன் உள்ள போட்டோவை நீக்கி உள்ளார். இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பதில் சொல்ல வேண்டும். மார்ச் 22-ந்தேதிக்கு பிறகும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு பலமுறை வர உள்ளார். இதைப்பற்றி பின்னர் விவரமாக தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com