

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக பேட்டி அளிப்பதற்கு முன், ஐஜி ரம்யா பாரதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதுவும் ஒரு பெண் காவலர் ஒரு சிறுகுழந்தைக்கு நேர்ந்துள்ள கொடூரம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வந்தநிலையில், அவர் சிரித்தது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்தது.
இந்த சம்பவம் தொடர்பாக இருபெரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, ‘அவரும் மனிதர்தானே, அவர் தினமும் இதுபோல நிறைய வழக்குகளை பார்ப்பார், பேட்டியளிப்பதற்கு முன்புதானே சிரித்தார்’ என்று அவருக்கு ஆதரவாக பேசப்பட்டது.
மற்றொன்று, ‘ஒரு காவல் அதிகாரி இதுபோன்ற உணர்ச்சிமிக்க சம்பவத்தை விவரிக்க வந்த இடத்தில் சிரிப்பதா? அங்கு எப்படி சிரிப்பு வரும்? என கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. காவல் அதிகாரியைத் தாண்டி, இதுதொடர்பாக பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சிரித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர்,
“காவல்துறை அதிகாரிகள் சிரிக்கவே கூடாதா?
எப்போதும் முறைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? கோவை சிறுமி வழக்கு குறித்து பேட்டி கொடுப்பதற்கு முன், தங்களுக்குள் வேறு விஷயங்களை பேசி சிரித்திருக்கிறார்கள். இது அதீதமான குற்றச்சாட்டு. காவல்துறை சிரிக்கக்கூடாதா? அவர்கள் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் சிரிக்கலாமா, சிரிக்கக்கூடாதா என எப்படி நீங்கள் பேசுவது? ஊடகங்கள் அதை பெரிதுப்படுத்தி விட்டார்கள்” என பதிலளித்துள்ளார்.
வன்னி அரசின் இந்த பதிலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அவர்கள் சிரித்ததை யாரும் தவறு சொல்லவில்லை, எந்த சூழல் என்பதுதான் பிரச்சனை. வன்னி அரசு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதால் இதுபோன்று பேசக்கூடாது. அவர் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.