

சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவில்லை. கூட்டணிக்கு ஆதரவு மற்றும் பிரசாரம் செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். முன்னதாக தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணத்தில் 60 பேர் பணம் செலுத்தி மனு பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் திடீரென அறிவித்ததால், விருப்ப மனுவுக்கு பணம் கட்டிய தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்தலில் போட்டியிடாததால் விருப்ப மனுவுக்கு செலுத்திய பணம் ரூ.30 லட்சம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டதாக தகவல் பரவியது. பொதுவாக விருப்ப மனுவுக்கு செலுத்திய பணம் திருப்பி தரப்படாது என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பணம் கட்டியவர்கள் சற்று அதிருப்தியில் இருந்தனர்.
இதையடுத்து விருப்ப மனுவுக்கு செலுத்திய பணத்தை தொண்டர்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதனை இன்று முதல் வருகிற 16-ந் தேதிக்குள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேரில் பெறலாம் என தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பணம் செலுத்தியவர்கள் சற்று நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.