பாலியல் தொழிலுக்கு வலைவிரிக்கும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை- விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் 94 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 55 விபசாரதரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழிலுக்கு வலைவிரிக்கும் இணையதளங்களை முடக்க நடவடிக்கை- விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி
Published on

சென்னை:

சென்னையில் மசாஜ் செண்டர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி இளம்பெண்களை வரவழைத்து அவர்களின் மனதை மாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை பிடிக்க சென்னை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் கீழ் இயங்கி வரும் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்புடன் விபசார வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் லாட்ஜுகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தரகர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் 94 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 55 விபசாரதரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் புரோக்கர்கள் செல்போன்கள் மூலமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அழைத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

தற்போது இணைய தளங்கள் மூலமாகவே புரோக்கர்கள் பாலியல் தொழிலுக்கு வலை விரித்து கொண்டிருக்கிறார்கள். லொகாண்டோ, ஜஸ்ட் டயல், விவா போன்ற பாலியல் இணையதளங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை வளைத்து போடும் தரகர்களின் எண்ணிக்கை நாளுக்கும் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனை கருத்தில் கொண்டு இந்த இணைய தளங்களை முடக்க விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.

இது போன்ற பாலியல் இணைய தளங்களை முற்றிலுமாக முடக்கும் வகையில் சைபர்கிரைம் போலீசார் மூலமாக விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் கூகுள் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021ன் படி இந்த இணைய தளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து முடக்குவதற்காக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறையின் செயலாளருக்கும் போலீசார் பரிந்துரை செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் மூலம் பாலியல் இணைய தளங்களுக்கு விரைவில் முட்டுக்கட்டை வருமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com