கணவருடன் தொடர்பு: பெண்ணைக் கொலை செய்து தோட்டத்தில் புதைத்த மனைவி- இன்று உடல் தோண்டி எடுப்பு

கணவருடன் தொடர்புடைய பெண்ணை கொலை செய்து தம்பி உதவியுடன் தோட்டத்தில் மனைவி புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவருடன் தொடர்பு: பெண்ணைக் கொலை செய்து தோட்டத்தில் புதைத்த மனைவி- இன்று உடல் தோண்டி எடுப்பு
Published on

தூத்துக்குடி சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 62). இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் பிருந்தா தேவி (32). இவருக்கும், கிருஷ்ண குமார் என்பவருக்கும் திருமணமாகி 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். கிருஷ்ண குமார் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிருந்தா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து செல்லத்துரை, தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, நேற்று முன்தினம் அதிகாலையில் பிருந்தாதேவி, அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள மாரிமுத்து வீட்டுக்கு சென்றதும், அதன்பின்னர் அவர் வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாரிமுத்து மற்றும் அவரது மனைவி சரவணப் பிரியா (34) ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பிருந்தா தேவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மாரிமுத்து கட்டிட காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் மாரிமுத்து வீட்டுக்கு பிருந்தாதேவி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காலையில் சரவணப் பிரியாவின் வீட்டுக்கு சென்ற பிருந்தாதேவி, அங்கிருந்த மாரிமுத்துவிடம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சரவணப் பிரியாவுக்கும், பிருந்தா தேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணப் பிரியா, பிருந்தாதேவியை கீழே தள்ளி தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு பிருந்தாதேவியை தனது கணவர் மாரிமுத்து, தனது தம்பி கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் பிருந்தா தேவியின் உடலை மறைக்க முயற்சி செய்தார். அதன்படி ஒரு சாக்கு மூட்டையில் பிருந்தாதேவியின் உடலை கட்டி வீட்டில் ஓரமாக வைத்துள்ளார்.

பின்னர் உடலை காரில் ஏற்றிச்சென்று ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சரவணப்பிரியா மற்றும் அவரது கணவர் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக் மற்றும் புதைக்க உடலை ஏற்றி சென்ற காரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையடுத்து பிருந்தா தேவியின் உடலை புதைத்த இடத்தை காட்டும்படி மாரிமுத்துவை போலீசார் நேற்று மதியம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் இடம் மறந்துவிட்டதாக கூறி நடித்துள்ளார். பின்னர் தங்கள் பாணியில் போலீசார் விசாரிக்கவே, தனது தோட்டத்தில் பிருந்தா தேவி உடலை புதைத்த இடத்தை அவர் காட்டியுள்ளார்.

ஆனால் அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அந்த இடத்தை தோண்ட வருவாய்த்துறையினருக்கு போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை தாசில்தார் முன்னிலையில் உடலை தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com