வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி பெண் அதிகாரி கார், வீடுகளில் ரூ.1.21 கோடி பறிமுதல்

தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கி உள்ள அறையில் இருந்து ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஷோபனா
ஷோபனா
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஷோபனா (வயது 57) வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

தந்தை பெரியார் பாலிடெக்னிக் வளாகத்திலேயே தங்கி உள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பான டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது பணிகளை ஆய்வு செய்வது போன்றவை இவரது பணியாகும்.

இந்த நிலையில் மண்டல செயற்பொறியாளர் ஷோபனா லஞ்சம் வாங்குவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு முதல் ரகசியமாக கண்காணித்தனர்.

வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஷோபனா காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார்.

அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரது காரில் சோதனையிட்டனர். அதில் ரூ.5 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்திற்கு கணக்கு இல்லை.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கி உள்ள அறையில் சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் பணம் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அலுவலகம் சம்பந்தமான 18 ஆவணங்கள் ஷோபனாவின் அறையில் இருந்தன. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஓசூரில் உள்ள ஷோபனாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர்.

அங்கு கட்டு கட்டாக ரூ.1 கோடிக்கு மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து பணத்தை கணக்கிட்டு வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com