பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - ஒருவர் பலி

பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் போஹோல் மாகாணத்தின் கடாபி நகருக்கு அருகே வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மணிலா:

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக்டன் தீவில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து அந்நாட்டு விமான படைக்கு சொந்தமான ‘எம்520எம்ஜி' தாக்குதல் ரக ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது‌. ஹெலிகாப்டரில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் போஹோல் மாகாணத்தின் கடாபி நகருக்கு அருகே வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனையடுத்து விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்டுக்குள் வராத ஹெலிகாப்டர் அங்குள்ள கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com