உளுந்தம் பருப்பு, மசாலா பொருட்கள் ரேஷன் கடைகளில் மீண்டும் விநியோகம்

மக்களுக்கு ரூ.4 ஆயிரம் பணமும், 14 வகையான மளிகை பொருட்களும் குறுகிய காலகட்டத்தில் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.
உளுந்தம் பருப்பு
உளுந்தம் பருப்பு
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் நேற்று கூட்டுறவு துறை மற்றும் உணவுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியவர் தலைவர் கருணாநிதி. 2007-ம் ஆண்டுதான் பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, ஆட்டா (கோதுமை மாவு), மசாலா என மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உள்ள பொருட்கள் சிறப்பு பொது விநியோக திட்டத்தில் வழங்கியது தி.மு.க. அரசு. ஆனால், இடையில் வந்த ஆட்சியாளர்கள் ஆட்டா மாவு, உளுந்தம் பருப்பு, மசாலா பொருட்கள் வழங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

இப்போது அ.தி.மு.க. உறுப்பினர் கேட்கிறார். உளுந்தம் பருப்பை எப்போது கொடுப்பீர்கள் என்று. கண்டிப்பாக முதல்-அமைச்சர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். சொன்ன வாக்குறுதியை எல்லாம் நிறைவேற்றுவோம். சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி பதவியேற்ற முதல்நாளே கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவும் வகையில் 2 கோடியே 9 லட்சம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்து, அத்திட்டத்தை மே 10-ந்தேதி தொடங்கி வைத்தார். மேலும் 14 வகையான பொருட்களையும் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தொடங்கி வைத்தார். மக்களுக்கு ரூ.4 ஆயிரம் பணமும், 14 வகையான மளிகை பொருட்களும் குறுகிய காலகட்டத்தில் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com