

தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியமாக விளங்கும் வேளாண்மை தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவ்வகையில், தமிழ்நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை, பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “சூரிய சக்திக் கொள்கை” ஒன்றை 2012-ஆம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், 117 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியத்தில்
நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்களும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும்.