காதல் மனைவியை 27 இடங்களில் குத்தி கொலை செய்தது ஏன்?- டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

எனது குழந்தைகளை பார்ப்பதற்காக நிவேதாவின் தாய் சரோஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்து இருந்தார். கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக எனது மனைவிக்கும், எனக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
காதல் மனைவியை 27 இடங்களில் குத்தி கொலை செய்தது ஏன்?- டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையம் கோவிந்தசாமி தேவர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). டிரைவர். இவரது மனைவி நிவேதா (24). இவர்களுக்கு 7 வயதில் ஹரீஸ் என்ற மகனும், 5 வயதில் பூஜா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

நேற்று வீட்டில் இருந்த கணேசனுக்கும், அவரது மனைவி நிவேதாவுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், நிவேதாவை கத்தியால் குத்திக்கொலை செய்தார். பின்னர் அவர் சூலூர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் அந்தமான் நிகோபார் தீவில் பிறந்தேன். பெற்றோரை இழந்த என்னை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தத்து எடுத்து வளர்த்தார். நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூரில் உள்ள ஒரு பஞ்சு மில்லில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அங்கு பணியாற்றிய திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மணச்சநல்லூரை சேர்ந்த நிவேதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. பின்னர் நாங்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையம் வந்து வசித்து வந்தோம். இங்கு லோடு ஆட்டோ ஓட்டி வந்தேன். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி கண்ணம்பாளையத்தில் உள்ள மில்லுக்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கு அதே மில்லில் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரை வீட்டிற்கு அழைத்து எனது மனைவி ஜாலியாக இருந்து வந்தார். இது எனக்கு அக்கம் பக்கத்தினர் மூலமாக தெரிய வந்தது. இதனையடுத்து நான் எனது மனைவியை கண்டித்தேன்.

இதன் காரணமாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நான் நிவேதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி நிறுத்தினேன். அதன் பின்னரும் அவர் செல்போன் மூலமாக அந்த வாலிபருடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனது குழந்தைகளை பார்ப்பதற்காக நிவேதாவின் தாய் சரோஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்து இருந்தார். நேற்று நான் வேலைக்கு சென்று விட்டு மது போதையில் வீட்டிற்கு சென்றேன். அப்போது மாமியாரிடம் எனது குழந்தைகளுக்கு ஜூஸ் வாங்கி கொடுக்கும்படி கூறி வெளியே அனுப்பி வைத்தேன்.

அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக எனது மனைவிக்கும், எனக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து நிவேதாவின் கழுத்தில் 5 இடங்களில் குத்தினேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். அத்திரம் அடங்காத நான் தொடர்ந்து அவரது மார்பு, வயிறு, தொடை, கால் உள்ளிட்ட 27 இடங்களில் கத்தியால் குத்தினேன். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியோடு ஆட்டோவில் சென்று சூலூர் போலீசில் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

போலீசார் கள்ளக்காதல் விவகாரத்தில் காதல் மனைவியை 27 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த கணேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com