search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளை மலை உச்சியில் இருந்து தள்ளி தற்கொலைக்கு முயன்ற காண்டிராக்டர்: விஷத்துடன் காட்டுக்குள் சென்றவர் கதி என்ன?
    X

    மகளை மலை உச்சியில் இருந்து தள்ளி தற்கொலைக்கு முயன்ற காண்டிராக்டர்: விஷத்துடன் காட்டுக்குள் சென்றவர் கதி என்ன?

    • பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
    • போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது50).

    இவர் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு வேத விக்னேஷ்வரி(13) என்ற மகளும் மோகன்ராம், அகிலேஷ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    வேத விக்னேஷ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சுப்புராஜூக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரது மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். கடனை அடைக்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டும் வந்துள்ளார்.

    வேதவிக்னேஷ்வரியை, தினமும் சுப்புராஜ் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மகளை அழைப்பதற்காக பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் அங்கு மகளை அழைத்து கொண்டு கொல்லிமலைக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற அவர், திடீரென, அங்கிருந்து, மகளை தள்ளி விட முயற்சித்தார்.

    அப்போது சிறுமி தனது தந்தையிடம் பஸ்சுக்கு லேட் ஆகுது, எனக்கு பசிக்கிறது என கூறி தந்தையை அழைத்தார். இதையடுத்து, சுப்புராஜ் மகளுடன் ஈரோட்டுக்கு சென்றார்.

    பின்னர் பன்னாரி அம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அதனை மகளின் வாயில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். ஆனால் சிறுமி குடிக்க மறுப்பு தெரிவித்து கதறி அழுதார்.

    குழந்தை அழுததை பார்த்ததும் பதறிபோன சுப்புராஜ், தனது மகளிடம் ரூ.70-யை கொடுத்து, நீ வீட்டுக்கு செல் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.

    சிறுமியும் அங்கிருந்து நேராக வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியில் பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    அன்னூர் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சி மருந்துடன் காட்டுக்குள் சென்ற சுப்புராஜை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×