search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடலூரில் ஊர்க்காவல் படை வீரரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது
    X

                                                 கொலை செய்யப்பட்ட நாகேந்திரன்,    கைதான பிரகாஷ்


    கூடலூரில் ஊர்க்காவல் படை வீரரை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது

    • கடந்த வாரம் நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை பிரகாஷ் வாங்கி சென்று பழுதாக்கி கொடுத்துள்ளார்.
    • நாகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் முத்தையர் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் நாகேந்திரன் (வயது27). இவர் கடந்த 3 வருடங்களாக ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வந்தார். இவரும் தேவக்கனி (23) என்பவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இவரும் புதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரும் நண்பர்கள். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா சமயத்தில் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டார். தற்போது கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகேந்திரனின் லேப்டாப்பை பிரகாஷ் வாங்கி சென்றார். பின்னர் அதனை பழுதாக்கி திருப்பி கொடுத்தார். இதனால் நாகேந்திரன் சத்தம் போட்டுள்ளார். அதன்பின் கடந்த வாரம் நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை பிரகாஷ் வாங்கி சென்று பழுதாக்கி கொடுத்துள்ளார்.

    இதனால் லேப்டாப் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுதாகி கொடுத்தற்கான தொகையை பிரகாசிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்று இரவு நாகேந்திரனுக்கு போன் செய்து பணம் தருவதாக பிரகாஷ் கூறி உள்ளார். இதனால் மோட்டார் சைக்கிளில் நாகேந்திரன் வெளியே வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகாஷ் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் நாகேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பின் தான் வெட்டிய அரிவாளுடன் கூடலூர் டவுன் வடக்கு போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் சரண் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×