search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் முடிந்ததால் கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
    X

    கொடைக்கானல் மோயர்பாயிண்ட்டில் குவிந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    தேர்தல் முடிந்ததால் கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

    • கொடைக்கானலில் உயர்தர மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட விடுதிகள் அதிக அளவில் உள்ளன.
    • வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதல் தர விடுதிகளில் இடம் கிடைக்காவிட்டால் மற்ற இடங்களை தேடி செல்வது வழக்கம்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதாலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக தேர்தல் பணி காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டதால் ஓய்வுக்காக கொடைக்கானலை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் அனைத்து விடுதிகளும் நிரம்பி உள்ளது. கொடைக்கானலில் உயர்தர மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட விடுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த விடுதிகளை எங்கிருந்த நிலையிலும் ஆன்லைன் மூலமே புக்கிங் செய்து கொள்ளலாம். அதன்படி தேர்தல் முடிந்த 20-ந்தேதி முதல் பேக்கேஜ் விடுமுறையாக ஒருவாரம் வரை பலர் புக்கிங் செய்துள்ளனர். இதனால் அனைத்து விடுதிகளிலும் நிரம்பி விட்டது. இவற்றை தவிர நடுத்தர விடுதிகள் மற்றும் ஏராளமான காட்டேஜ்களும் உள்ளன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதல் தர விடுதிகளில் இடம் கிடைக்காவிட்டால் மற்ற இடங்களை தேடி செல்வது வழக்கம்.

    எனவே முதல் தர விடுதிகள் நிரம்பி விட்டதால் மற்ற விடுதிகளை நோக்கி அவர்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலில் குவிய தொடங்கி உள்ளனர்.

    கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் பகல் பொழுதில் வெப்பம் நிலவி வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் இல்லாத அளவுக்கு ரம்யமான சீதோசனம் காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட சுற்றுலா தலங்களில் மீண்டும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள டாக்சி டிரைவர்கள், வழிகாட்டிகள், ஓட்டல் உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×