search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மனநிலை பாதித்த பெண் கொடூரக்கொலை-கைதான ஆம்புலன்ஸ் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    மனநிலை பாதித்த பெண் கொடூரக்கொலை-கைதான ஆம்புலன்ஸ் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

    • 2 மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
    • பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூர் அவிநாசி-மங்கலம் புறவழிச்சாலை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் அப்பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

    இதில் அப்பகுதியில் உள்ள ஒரு கடை முன் அந்தப்பெண் தூங்கி கொண்டிருந்ததும், அவ்வழியே வந்த வாலிபர் ஒருவா் அந்த பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததும் பதிவாகியிருந்தது.

    தொடா்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்த நபா் திண்டுக்கல் மாவட்டம் புஷ்பபுதூா் பகுதியை சோ்ந்த ஜெயபால் ராஜ்சிங் மகன் ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங்(வயது22) என்பதும், 2 மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றபோது அவிநாசி-கோவை பிரதான சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி, அவிநாசி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சற்று மனநிலை பாதித்தவர். இதனால் அவர் அவினாசி-மங்கலம் சாலையில் சுற்றி திரிந்து வந்துள்ளார். இரவு அங்குள்ள கடைகளில் படுத்து தூங்குவது வழக்கம். இதனை ஹில்டன் ஜெயபால் ராஜ்சிங் நோட்டமிட்டு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் அவரை பணிக்கு வர வேண்டாம் என்று ஆம்புலன்ஸ் உரிமையாளர் கூறிவிட்டார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் அவிநாசி-மங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்துள்ளார். மேலும் கஞ்சா போதையிலும் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் மனநிலை பாதித்த பெண் தனியாக சுற்றிதிரியவே அவரிடம் பேச்சு கொடுத்த ஹில்டன், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

    தொடர்ந்து அவிநாசி-மங்கலம் சாலையில் சுற்றி திரிந்த ஹில்டன், அங்குள்ள கடை முன்பு மனநிலை பாதித்த பெண் படுத்து கிடப்பதை பார்த்துள்ளார். பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியில் சொல்லி விடுவாளோ என்று பயந்த ஹில்டன், திடீரென அங்கு கிடந்த கல்லை தூக்கி பெண்ணின் தலையில் போட்டார். இதில் அந்த பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் பெண்ணின் உடலை மறைக்க அங்குள்ள வடிகால் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

    இதையடுத்து உடலை கடை முன்பு இருந்து தரதரவென இழுத்து சென்றார். சாலையை கடந்து மறுபுறம் வரை இழுத்து சென்று வடிகால் பகுதியில் போட்டு விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். அப்போது போதை மயக்கத்தில் இருந்ததால் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினார். பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். நண்பர்கள் வந்து ஹில்டனை மீட்டு அவிநாசி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அப்போது நண்பர்களிடம் கொலை செய்ததை கூறவில்லை.

    இந்தநிலையில் வடிகால் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை மீட்க தனியார் ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பெண்ணை கொலை செய்த வாலிபரின் உருவம் பதிவாகி இருந்ததை போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் காண்பித்தனர்.

    அந்த வாலிபரின் உருவத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்த போது ஹில்டன் என்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் விவரத்தையும் கூறியுள்ளார். அதன்பிறகே போலீசார் ஹில்டனை கைது செய்துள்ளனர். மேலும் கொலை செய்ததற்காக காரணங்களை ஹில்டன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கொலை செய்யப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனநிலை பாதித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஹில்டன் , பெண்ணின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×