search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிவு- விவசாயிகள் கவலை
    X

    உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிவு- விவசாயிகள் கவலை

    • கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
    • திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் வகையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதை ஆதாரமாக கொண்டு முதலாம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 100 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2½ சுற்றுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அதே போன்று பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.

    அத்துடன் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணை மண் திட்டுக்களாகவும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியும் வருகிறது. ஆனாலும் காண்டூர் கால்வாயின் உதவியால் பாசனத்திற்கு தண்ணீரும், அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீரும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்து வருகிறது. தற்போது முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று தண்ணீர் நிறைவடைந்து 2-ம் சுற்றுக்காக தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 36.31 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×