search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கோவில் திருவிழா
    X

    திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கோவில் திருவிழா

    • கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள்.
    • நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிபட்டியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு பங்கேற்ற வினோத திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

    இந்த கோவிலில் சாமிக்கு உருவம் கிடையாது.ஆனால் பெரிய அளவில் மரங்கள் உள்ளது. இந்த மரங்களின் இடையில் அரிவாள் மற்றும் வேல் கம்புகள் உள்ளது.இதையே தெய்வமாக நினைத்து இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வழிபட்டு வருகிறார்கள். இந்தப் பாரம்பரிய திருவிழாவை ஒட்டி தலையாரிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இங்கு குவிந்தனர்.அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் முன்பு ஆடுகள் பலியிடப்பட்டன.தொடர்ந்து பெரிய அண்டாக்களில் சாப்பாடு கறி குழம்பு தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் ஆண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கறி விருந்து தொடங்கியது.அப்போது திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் தரையில் வரிசையாக அமர்ந்தனர்.பின்னர் அவர்களுக்கு வாழை இலையில் சாப்பாடு, கறி குழம்பு பரிமாறப்பட்டது.விடிய விடிய இந்த கறி விருந்து நடைபெற்றது.இதில் தலையாரிபட்டி,ராமராஜபுரம்,பாறைப்பட்டி, ஜோத்தாம்பட்டி,வடுகபட்டி, பூவகிழவன்பட்டி, மணியக்காரன்பட்டி, மந்தநாயக்கன்பட்டி, ஏழு கொட்டம், 4 கொட்டம், வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் பெரியோர்கள் என ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு கமகம கறி விருந்தை சாப்பிட்டனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும் போது, எங்கள் முன்னோர்கள் கிராமங்களில் நல்ல மழை பெய்திடவும்,நோய் நொடி இல்லாமல் கிராம மக்கள் நிம்மதியாக வாழவும், இந்த வழிபாட்டை நடத்தி வந்தனர். இந்த விழாவை நாங்களும் ஒன்று சேர்ந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்துகிறோம். இந்த கறி விருந்து வெளியில் பெண்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அருகிலேயே ஒரு பெரிய குழி தோண்டி மீதம் இருக்கக்கூடிய சாப்பாடு மற்றும் இலைகளை குழியில் புதைத்து விடுவோம் என்றனர்.

    Next Story
    ×