search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அந்தியூர் அருகே சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
    X

    அந்தியூர் அருகே சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

    • கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
    • வேலைக்கு செல்லும் பணியாளர்களும் அவதி அடைந்தனர். வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அருகில் உள்ள ஊருக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்தனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர். உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் அந்தியூர்-மைசூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதி அடைந்தனர். இதே போல் வேலைக்கு செல்லும் பணியாளர்களும் அவதி அடைந்தனர். வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கெட்டி சமுத்திர ஊராட்சி செயலாளர் பெரியசாமி தலைவர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதி பெண்கள் சீரான குடிநீர் இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக கூறினர். இதனை அடுத்து உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 30 நிமிடம் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    Next Story
    ×