search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது... மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வினியோகம்
    X

    ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது... மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வினியோகம்

    • ஜல்லிக்கட்டில் களம் காண காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
    • ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

    கந்தர்வகோட்டை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். எனினும் தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. ஜனவரி முதல் மே மாதம் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களை கட்டும். கோவில் திருவிழாக்களில் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு காணப்படும்.

    புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவையொட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது.

    இதற்காக வாடிவாசல், கேலரி, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி யது.

    ஆன்லைனில் பதிவு செய்த மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் களம் காண காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.

    ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதனை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்வதற்கு, கொம்புகளால் முட்டி தூக்கி தள்ளுவதற்கும் காளைகளின் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் காளைகளை அடக்குவதற்கும் மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 48 ஜல்லிக்கட்டும், 7 இடங்களில் மஞ்சுவிரட்டும், 17 இடங்களில் வடமாடு மஞ்சுவிரட்டும் என மொத்தம் 72 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

    இதனிடையே இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் தொடா்பாக தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால் தேர்தல் நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காது என்ற நிலையில் முன்கூட்டியே ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த பகுதி மக்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×