search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணப்பாறை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 30-ந் தேதி மதிமுக போராட்டம்- வைகோ அறிவிப்பு
    X

    மணப்பாறை ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி 30-ந் தேதி மதிமுக போராட்டம்- வைகோ அறிவிப்பு

    • மதுரை-சென்னை ஒருவழித் தடத்தில் மட்டுமே நின்று செல்கிறது.
    • மணப்பாறை ரெயில் நிலையத்தில் மாதம் ரூ.15 லட்சம் பயணச்சீட்டு வருமானம் கிடைக்கின்றது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி-வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரெயில் பயணம் மேற் கொள்ள வேண்டியுள்ளது.

    மணப்பாறை-திருச்சியிலிருந்து 45 கிமீ தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கிமீ தூரத்திலும் உள்ளது. திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கிமீ-க்கு இடையில் மணப்பாறை ரெயில் நிலையம் மட்டுமே உள்ளது.

    அகல ரெயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று சென்றன. அதனால் தான் மணி ஐயர் தயாரித்து மணப்பாறை ரெயில் நிலைய ஸ்டாலில் விற்கப்பட்ட மணப்பாறை முறுக்கு உலகப் புகழ் பெற்றது.

    காந்தி மதுரை பயணம் மேற்கொண்டபோது, தியாகி முத்து வீராசாமி தலைமையில் மணப்பாறை பொதுமக்கள் வரவேற்பு நல்க, ரெயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நின்று காந்தி பேசியதும், மொழிப்போர் காலத்தில் மணப்பாறை ரெயில் நிலையத்தை மாணவர்கள் அதிகம் பயன்படுத்திய வரலாறும் காலக் கல் வெட்டாக நிலைத்து நிற்கின்றது.

    இத்தகைய பெருமைகளுக்கு உரிய நகரான மணப்பாறையில் பொது மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரெயில்கள் நின்று செல்கின்றன.

    திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி ரெயில் மணப்பாறையில் நிற்க வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிகளின் போராட்டக் குழுவின் சார்பில் 2014-ம் ஆண்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு திருச்சி ரெயில் நிலைய நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இண்டர்சிட்டி ரெயில் மணப்பாறையில் நிற்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை முன் வைத்துப் பேசியதும், அன்றைய தினமே இண்டர்சிட்டி ரெயில் மணப்பாறையில் நிற்கும் என்று ரெயில்வே அமைச்சர் அறிவித்ததும் நினைவு கூறத்தக்கது.

    அதேபோல, 2018-ல் மதிமுக நடத்திய ரெயில் மறியல் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை துரித ரெயில் மணப்பாறையில் நின்று செல்கின்றது.

    இருவழி நிறுத்தமாக இருந்த பாண்டியன் விரைவு ரெயில், தற்போது மதுரை-சென்னை ஒருவழித் தடத்தில் மட்டுமே நின்று செல்கிறது. எனவே சென்னை-மதுரை ரெயிலையும், வாரம் மூன்று முறை இயக்கப்படும் ராமேஸ்வரம்-திருப்பதி துரித ரெயில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகின்ற அந்த்யோதயா உள்ளிட்ட மணப்பாறை வழியாகச் செல்லும் அனைத்து ரெயில்களையும் மணப்பாறையில் நிறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

    தற்சமயம், மணப்பாறை ரெயில் நிலையத்தில் மாதம் ரூ.15 லட்சம் பயணச்சீட்டு வருமானம் கிடைக்கின்றது.

    மணப்பாறையில் அனைத்து ரெயில்களையும் நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கை பொது மக்களிடம் தற்போது வலுத்து வருகின்றது.

    இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 30-ந் நாள் திங்கள்கிழமை மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மதிமுக சார்பாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே. முத்துப்பாண்டி, மணப்பாறை ஒன்றியச் செயலாளர்கள் ஆ.துரை ராஜ், ப.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் ரெயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது.

    ஆகவே, மணப்பாறை மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, மத்திய ரெயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×