search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து
    X

    மதுரை ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து

    • ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் சீலிங் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது.
    • தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மதுரை:

    மதுரை ராம்நகர் பைபாஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து இன்று காலை 6.20 மணியளவில் திடீரென புகை வந்தது. பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன.

    இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் சலீம் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 குளிர்சாதன எந்திரங்கள் மற்றும் சீலிங் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகிவிட்டது.

    தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.55 லட்சம் சேதமில்லாமல் தப்பியது. மேலும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    எல்லீஸ்நகர் போலீசார் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கு வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×