search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை: குளச்சலில் 42.6 மில்லி மீட்டர் பதிவு
    X

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதை படத்தில் காணலாம்.

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை: குளச்சலில் 42.6 மில்லி மீட்டர் பதிவு

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னி பூ அறுவடை முடிவடைந்த நிலையில் கும்பப்பூ சாகுபடி பணியை முன் கூட்டியே தொடங்கி உள்ளனர்.
    • சுசீந்திரம், தேரூர், புத்தேரி பகுதிகளில் வயல் உழவு பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலிருந்து மழை நீடித்தது.

    நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. குளச்சலில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 42.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பூதப்பாண்டி, களியல், குழித்துறை, மயிலாடி, சுருளோடு, தக்கலை, கோழி போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அருவிக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னி பூ அறுவடை முடிவடைந்த நிலையில் கும்பப்பூ சாகுபடி பணியை முன் கூட்டியே தொடங்கி உள்ளனர்.

    சுசீந்திரம், தேரூர், புத்தேரி பகுதிகளில் வயல் உழவு பணி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக 781 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.60 அடியாக உள்ளது. அணைக்கு 462 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 10.2, பெருச்சாணி 24.2, சிற்றார் 1-12.2, சிற்றார் 2-15, பூதப்பாண்டி 5, களியல் 16.2, கன்னிமார் 6.2, கொட்டாரம் 8.2, குழித்துறை 16.4, மயிலாடி 30.2, நாகர்கோவில் 26, புத்தன்அணை 24.2, தக்கலை 21.4, குளச்சல் 42.6, இரணியல் 34, பாலமோர் 10.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 14.6, கோழிப்போர்விளை 20.2, அடையாமடை 7.2, குருந்தன்கோடு 24, முள்ளங்கினா விளை 12.8, ஆணைக்கிடங்கு 15.2, முக்கடல் 2.

    மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக மழை பெய்த போதும் முக்கடல் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தொடர்ந்து மைனஸ் அடியாகவே உள்ளது. இன்று காலை அணை நீர்மட்டம் மைனஸ் 10.90 அடியாக உள்ளது.

    Next Story
    ×