திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் தவளை: சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி- கடை வியாபாரி அதிரடி கைது

ஐஸ்கிரீமில் தவளை கிடந்தது பற்றி ஜானகிஸ்ரீ திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் தவளை: சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி- கடை வியாபாரி அதிரடி கைது
Published on

மதுரை:

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள் மித்ராஸ்ரீ(வயது 8), ரக்சனாஸ்ரீ(7) மற்றும் உறவினர் மகள் தாரணி(4) ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அழைத்து வந்தார்.

அப்போது கோவில் அருகில் உள்ள ஒரு குளிர்பான கடையில் குழந்தைகளுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்தார். அதனை குடித்த 3 குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்தனர். இதனால் சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் குடித்த ஜிகர்தண்டாவை வாங்கி பார்த்தார்.

அப்போது அதில் போடப்பட்டிருந்த ஐஸ்கிரீமில் ஒரு தவளை செத்து கிடந்தது. இதையடுத்து வாந்தி எடுத்த 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஐஸ்கிரீமில் தவளை கிடந்தது பற்றி ஜானகிஸ்ரீ திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குளிர்பான கடையின் உரிமையாளர் துரைராஜன்(60) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com