

அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை அருகே உள்ள கடம்பன் குளம் கிராமத்தை சேர்ந்த சங்கர். இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களது மகன் கார்த்திக். என்ஜினீயர் பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக லண்டனுக்கு சென்றார். அங்கு கார்த்திக்கிற்கும், தன்னுடன் பணிபுரிந்த அந்த நாட்டை சேர்ந்த கேட்டியா ஒலி வேரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இந்துமத முறைப்படி கேட்டியா ஒலி வேரா தன்னுடைய பெயரை மீனாட்சி என காதலுக்காக மாற்றி கொண்டார். அவருக்கு பெற்றோர்கள், உறவினர்கள் இல்லை என தெரிகிறது. இதனால் தன்னுடைய திருமணம் இந்தியாவில் இந்து முறைப்படி நடைபெற வேண்டும் என காதலன் கார்த்தியிடம் கேட்டியா ஒலி வேரா தெரிவித்தார். இவர்களது காதலுக்கு கார்த்திக்கின் பெற்றோரும் ஒப்புதல் தெரிவித்தனர்.
இதையடுத்து கார்த்திக்-கேட்டியா ஒலி வேரா திருமணம் இன்று அருப்புக்கோட்டை அருகே வலுக்கலொட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்தது. தமிழக முறைப்படி மணமக்கள் மணமேடைக்கு வந்தனர்.
தொடர்ந்து மந்திரங்கள் ஓத கார்த்திக் இந்து முறைப்படி தாலி கட்டி தனது காதலி கேட்டியா ஒலி வேராவை திருமணம் செய்து கொண்டார். இதில் கார்த்திக்கின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.