search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காரணம் இல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு கிடுக்குபிடி- விளக்கம் கேட்க கல்வித்துறை முடிவு
    X

    காரணம் இல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு கிடுக்குபிடி- விளக்கம் கேட்க கல்வித்துறை முடிவு

    • ஆசிரியர்கள், மாணவர் வருகைப் பதிவு டி.என்.எஸ்.இ.டி. செயலி வழியாக தற்போது பதிவு செய்யப்படுகிறது.
    • ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களும் செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி உள்ளது. தற்காலிக விடுப்பு ஆண்டுக்கு 72 நாட்களும், சம்பளத்துடன் விடுப்பு 15 நாட்களும் எடுக்கலாம்.

    இது தவிர மருத்துவ விடுப்பு 5 வருடத்திற்கு 90 நாட்கள் எடுத்து கொள்ளவும் அனுமதி உள்ளது.

    மருத்துவ விடுப்பை தொடர்ந்து 90 நாட்கள் எடுக்க அனுமதி இல்லை. 29 நாட்கள் தொடர்ந்து எடுத்த பிறகு மீண்டும் 2 நாட்கள் பணி செய்ய வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் விடுப்பு எடுப்பதில் கடைபிடிக்கப்படுகிறது.

    நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் தொடர்ந்து நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு சிலரால் பள்ளிக்கு தொடர்ந்து வர முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் நோய் பாதிப்பு இல்லாதவர்கள் ஒரு சிலர் நீண்ட நாட்கள் விடுப்பில் இருப்பதாக கல்வி துறைக்கு தகவல் வந்துள்ளது.

    முறையான காரணம் இல்லாமல் மாணவர்களின் படிப்பை பற்றி எவ்வித கவலைபடாமல் அடிக்கடி விடுப்பு எடுக்கின்றனர்.

    ஆசிரியர்கள், மாணவர் வருகைப் பதிவு டி.என்.எஸ்.இ.டி. செயலி வழியாக தற்போது பதிவு செய்யப்படுகிறது. ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களும் இந்த செயலி வாயிலாகவே பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    ஆனால் ஆசிரியர்கள் விடுப்பு பற்றிய முழு விவரங்கள் இதில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி விடுப்பு எடுப்பவர் நீண்ட நாட்கள் எடுப்பவர், எவ்வித தகவலும் சொல்லாமல் விடுப்பில் இருப்பவர் போன்ற தகவல்களை கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் கல்வி பற்றி கவலைப்படாமல் நீண்ட காலமாக விடுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொடக்கக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஒருசில ஆசிரியர்கள் சுய தொழில் விஷயமாக விடுப்பு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வருவது இல்லை. ஆசிரியர் பணி தவிர வேறு தொழிலும் செய்வதால் அடிக்கடி விடுப்பு போடுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் முறையான தகவலை தருவது இல்லை. அதனால் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் பற்றி சரியான தகவலை பெற வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்தபோது ஆசிரியர்கள் நீண்ட காலமாக விடுப்பில் இருப்பது தெரியவந்தது. முறையான தகவல் தராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து இருப்பதும் தெரிந்ததையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இனி இஷ்டத்திற்கு விடுப்பு எடுக்க முடியாது. அதற்கு முறையான காரணம், ஆவணங்கள் தேவை. நீண்ட காலம் விடுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    Next Story
    ×