கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி- தினமும் 10 டன் கேரட் குப்பையில் வீச்சு

கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்கெட்டில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி- தினமும் 10 டன் கேரட் குப்பையில் வீச்சு
Published on

போரூர்:

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் மாலூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரட் விற்பனைக்கு வருகிறது. தினசரி 10 லாரிகளில் 80 முதல் 100 டன் அளவுக்கு கேரட் விற்பனைக்கு வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் கோயம்பேடு மார்கெட்டில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ஊட்டி கேரட் ரூ.35-க்கும், மாலூர் கேரட் ஒரு கிலோ ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

ஆனால் அதையும் வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனை ஆகாமல் கேரட் மூட்டை, மூட்டையாக தேங்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து கேரட்டுகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினமும் 10 டன் கேரட் மூட்டை, மூட்டையாக குப்பையில் வீணாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கேரட் மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, வரத்து அதிகரிப்பால் கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் கடந்த சில நாட்களாகவே அதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.

மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேக்கமடைந்து கிடக்கும் கேரட் மறுநாளே அழுகி வீணாகி விடுகிறது. இதனால் தினசரி 10டன் அளவிலான கேரட் குப்பையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com