கொடைக்கானலில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய கல்லூரி மாணவர்

சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.
கொடைக்கானலில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய கல்லூரி மாணவர்
Published on

கம்பம்:

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக போதை காளான், கஞ்சா எண்ணை போன்றவற்றை பயன்படுத்த கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர்.

போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் செண்ட் பாட்டில் வடிவத்தில் கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டிவந்த கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த பிரசன்னா(21) என்பவரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அவர் கல்லூரி மாணவர் என்பதும், நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது கஞ்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். போலீசார் கல்லூரி மாணவர் பிரசன்னாவை கைது செய்து கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். அவருடன் வந்த மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com