search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் 27-ந்தேதி தாக்கல்
    X

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் 27-ந்தேதி தாக்கல்

    • மழை நீர், கால்வாய் கழிவுநீர் கால்வாய், சீரமைத்தல், மேம்பாலம் கட்டுதல், சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளிவருகிறது.
    • கல்வி, சுகாதாரம், பூங்கா மேம்பாடு, விளையாட்டு திடல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஒருமாதமாக தயார் செய்யப்பட்டு வந்தது.

    கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தலின் பேரில் அனைத்து துறை அதிகாரிகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டம் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வரி விதிப்பு மற்றும் நிதிநிலைக் குழு தலைவர் சர்பஜெய தஸ் நரேந்திரன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

    சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து மேலும் பல அறிவிப்புகள் அது தொடர்பாக இடம்பெறலாம்.

    மழை நீர், கால்வாய் கழிவுநீர் கால்வாய், சீரமைத்தல், மேம்பாலம் கட்டுதல், சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளிவருகிறது. கல்வி, சுகாதாரம், பூங்கா மேம்பாடு, விளையாட்டு திடல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மேயர் 67 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்த பட்ஜெட்டில் கவுன்சிலருக்கான வார்டு வளர்ச்சி நிதி உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.35 லட்சத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனால் கவுன்சிலர் வார்டு வளர்ச்சி நிதி உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய கூட்டம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடுவதோடு நிறைவுபெறும். மறுநாள் 28-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. கட்சி வாரியாக கவுன்சிலர்கள் விவாதத்தின் மீது பேசுவார்கள்.

    நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள் பேச இறுதியில் மேயர் பதில் உரை நிகழ்த்துவார்.

    Next Story
    ×