

விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சியில் என்ஜினியராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்.
இவர் தனது மனைவியுடன் காரில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த கார் இன்று அதிகாலை 3 மணியளவில் விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் பகுதியில் வந்தது.
அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள வாய்க்காலில் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேசும், அவரது மனைவியும் காப்பாற்ற யாராவது அந்த வழியாக வருகிறார்களா? என்று பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் யாரும் அந்த வழியாக வரவில்லை.
இதனால் ரமேஷ் தன்னுடைய செல்போன் மூலம் விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கூறினார். மேலும் போன்மேப் மூலம் அவர்கள் வாய்க்காலில் சிக்கி கொண்ட இடத்தை தெரிவித்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கிய ரமேசையும், அவரது மனைவியையும் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். பின்னர் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நீரில் மூழ்கிக்கொண்டிருந்த காரை வெளியில் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. கார் கண்ணாடி மட்டும் சேதமானது.