என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்க கடலில் பலத்த சூறைக்காற்று- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- துறைமுகங்களில் படகுகள் இரண்டாவது நாளாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:
வங்கக் கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரையில் மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் நேற்று முதல் தடை விதித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர், தேவிபட்டணம், சோளியகுடி, தொண்டி ஆகிய துறைமுகங்களில் இருந்து 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதன் காரணமாக அந்தந்த துறைமுகங்களில் படகுகள் இரண்டாவது நாளாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக் செல்லவில்லை. ரூ.5 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.






