ஆத்தூரில் மது போதையில் தகராறு- தொழிலாளி அரிவாளால் வெட்டி படுகொலை

சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.மதுபோதை தகராறில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூரில் மது போதையில் தகராறு- தொழிலாளி அரிவாளால் வெட்டி படுகொலை
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை தெற்கு காட்டை சேர்ந்தவர் சந்திரன் (வயது 55).

அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (54). தொழிலாளிகளான இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் துலுக்கனூர் தெற்கு காடு செல்லும் வழியில் சேரன் சாலை என்ற இடத்தில் வைத்து ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே கைகலப்பாக மாறியது.

ஆத்திரம் அடைந்த முருகேசன் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்திரனை தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரன் துடித்துடித்து இறந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே முருகேசன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுபோதை தகராறில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com