search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி
    X

    மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி

    • போலீஸ் வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விஷ சாராயத்தை குடித்துவிட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (வயது 50). தரணிவேல் (50). மண்ணாங்கட்டி (47). சந்திரன் (65). சுரேஷ் (65). மண்ணாங்கட்டி (55) ஆகியோர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர்.

    சாராயம் குடித்துவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்ற இந்த 6 பேரும் மயங்கி விழுந்தனர். இவர்களை மீட்ட உறவினர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதையடுத்து எக்கியர்குப்பம் மீனவ கிராமத்திற்கு மரக்காணம் போலீசார் விரைந்தனர். அப்போது கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு மயக்க நிலையில் வாந்தி எடுத்த தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகைவாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகிய 5 பேரை மீட்ட போலீசார், போலீஸ் வாகனத்திலேயே மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த விழுப்புரம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் உடல்நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், தரணிவேல் ஆகியோர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மீதமுள்ள 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், இன்று காலை டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் எக்கியார்குப்பம் கிராமத்திற்கு விரைந்தனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர். மாவட்டம் முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு எக்கியார்குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எக்கியர்குப்பம் மீனவர் பகுதிக்கு வந்து கள்ளச்சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

    விசாரணையில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரன் (25) என்பவர் புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்றதும், இதனை வாங்கி எக்கியார்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று மாலை குடித்ததும் தெரியவந்தது..

    மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன் அமரன் விற்ற கள்ள சாராயத்தை குடித்துவிட்டு எக்கியார்குப்பம் மீனவ பகுதியை சேர்ந்த சுப்புராயன் வயது (60) என்பவரும் இறந்து விட்டதாக கிராம மக்கள் கூறினர்.

    கடந்த காலங்களில் மது விலக்கு பிரிவு மரக்காணம் பகுதியில் இயங்கி வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பிரிவு வானூருக்கு மாற்றப்பட்டது. அதுமுதல் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் கூறினார்கள்.

    இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீசார் விரைந்து சென்று அமரனை கைது செய்தனர். மேலும், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வரும் 10-க்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விஷ சாராயத்தை குடித்துவிட்டு 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×