search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னைக்கு வெளியூர்களில் இருந்து இன்று 1000 சிறப்பு பஸ்கள்
    X

    சென்னைக்கு வெளியூர்களில் இருந்து இன்று 1000 சிறப்பு பஸ்கள்

    • விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு திரும்புகின்றனர்.
    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக மாநகர பஸ்களும் அதிகாலையில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறையுடன் மிலாடிநபி, காந்தி ஜெயந்தி போன்ற பண்டிகை நாட்களும் வந்ததால் தொடர் விடுமுறை கிடைத்தது.

    இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் படையெடுத்தார்கள். வெளியூர் பயணம் அதிகரித்ததால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பின. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொது மக்கள் முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாமலும் அரசு பஸ்களில் சென்றனர். இது தவிர கார்களிலும் பயணத்தை தொடங்கினர்.

    இந்த நிலையில் வெளியூர் சென்றவர்கள் விடுமுறை முடிந்து இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புறப்படுகின்றனர். 5 நாட்கள் விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு பயணம் ஆவதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறப்பு பஸ் இன்று மாலையில் இருந்து இயக்கப்படுகிறது.

    அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. இதனால் மற்ற போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வர 32 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 3 ஆயிரம் பேர் மற்ற நகரங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கூறியதாவது:-

    விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு திரும்புகின்றனர்.

    வழக்கமாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பஸ்கள் தவிர கூடுதலாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து கோயம்பேடுக்கு அதிகளவில் பஸ்கள் வரக்கூடும். அதனால் நெரிசல் ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக மாநகர பஸ்களும் அதிகாலையில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×