search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் பண்டிகையையொட்டி எட்டயபுரம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • சாதாரண வாரங்களில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வியாபாரம் நடைபெறும்.
    • நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்றிரவு முதல் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    எட்டயபுரம்:

    தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை.

    விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் வெள்ளாடு, சீனி வெள்ளாடு செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

    வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

    சாதாரண வாரங்களில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வியாபாரம் நடைபெறும். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆடுகள் வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்றிரவு முதல் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

    இந்த ஆண்டு அதிகளவு ஆடுகள் வரத்தும் இருந்தன, விற்பனையும் இருந்தது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் எடைக்கு ஏற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    விடிய விடிய களை கட்டியிருந்த சந்தையில் ஒரேநாளில் சுமார் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×