search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடும்ப பிரச்சினையால் கள்ளக்காதலனோடு சேர்ந்து தொழிலாளியை கொன்ற மனைவி
    X

    குடும்ப பிரச்சினையால் கள்ளக்காதலனோடு சேர்ந்து தொழிலாளியை கொன்ற மனைவி

    • பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் பாரதி (வயது 35). இவரது மனைவி திவ்யா (27). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். இதில் பாரதி மட்டும் சென்னையில் தங்கியிருந்து ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக பாரதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போதும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த சூழ்நிலையில் திருவிழாவுக்கு வந்திருந்த பாரதியை காணவில்லை என அவரது உறவினர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாரதியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாரதி மனைவி திவ்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் திவ்யாவும், அவரது கள்ளக்காதலன் கீழ்மாந்தூர் ஆர்.ஜே. நகரை சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார் ( 38) என்பவரும் சேர்ந்து பாரதியை கழுத்தை நெறித்து கொன்று பாலத்தின் அடியில் புதைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசாரிடம், மேலும் திவ்யா கூறிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு :-

    எனக்கும், கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்படும். அவர் சென்னையில் வேலை பார்த்தாலும் போனில் பேசும் போதெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.

    அந்த சமயத்தில் எங்கள் ஊர் அருகே உள்ள சதீஷ்குமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் தொடர்ந்து பேசி வந்தோம். கடந்த மாதம் கோவில் திருவிழாவுக்காக கணவர் பாரதி ஊருக்கு வந்தார். அப்போதும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் பாரதியை கொலை செய்ய முடிவு செய்தோம்.

    அதன்படி வீட்டில் இருந்த பாரதியை, நானும் சதீஷ்குமாரும் சேர்ந்து அடித்து கழுத்தை நெறித்து கொன்றோம். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் மினிலாரியில் போட்டு கொண்டு திருப்பனந்தாள் அருகே பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அடியில் புதைத்தோம். பின்னர் யாருக்கும் சந்தேகம் எதுவும் வராமல் இருக்க மற்றவர்களிடமும் சகஜமாக பேசினேன். ஆனால் எப்படியோ போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாபர்சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு பாரதி உடலை தோண்டி எடுத்தனர். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து திவ்யா, சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலனோடு சேர்ந்து தொழிலாளியை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×