search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: தள்ளாத வயதில் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த முதியவர்கள்
    X

    வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த முதியவர்களை காணலாம்.

    பாராளுமன்ற தேர்தல்: தள்ளாத வயதில் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த முதியவர்கள்

    • மட்டிகரைப்பட்டியை சேர்ந்த 95 வயது மூதாட்டி முதுமை காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
    • ஊன்றுகோல் உதவியுடன் வந்த வயதான மூதாட்டிகள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 72 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் நகர் பகுதியை விட கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இதேபோல் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து உற்சாகத்துடன் வாக்களித்து சென்றனர்.

    இளம் வாக்காளர்களை விட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் வகையில் வயதானவர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததை காண முடிந்தது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிகரைப்பட்டியை சேர்ந்த 95 வயது மூதாட்டி முதுமை காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். நேற்று தேர்தல் நாள்  என்பதால்தான் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனக்கூறிய மூதாட்டி வாக்கு மையத்திற்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தவே, உறவினர்களும் அவரை மொபட்டின் முன்புறம் அமர வைத்து வாக்கு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    வயது மூப்பு காரணமாக தேர்தல் அதிகாரிகள் அவரை வரிசையில் காத்திருக்க வைக்காமல் வாக்களிக்க அனுமதித்தனர். இதையடுத்து 95 வயது மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையிலும் அவர் தனது வாக்குப்பதிவை செலுத்தினார்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் நடக்க முடியாத சூழ்நிலையில் மூதாட்டிகள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். செட்டியார்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி வாக்குச்சாவடி மையத்திற்கு ஊன்றுகோல் உதவியுடன் வந்த வயதான மூதாட்டிகள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியை சேர்ந்த 92 வயதான மூதாட்டி ருக்மணி என்பவரும் வாக்களித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1962-ம் ஆண்டு முதல் தவறாமல் வாக்களித்து வருகிறேன். தற்போது எனக்கு வயது 92. வயது மூப்பு பாதிப்பு இருந்தாலும் நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்துள்ளேன் என்றார்.

    Next Story
    ×