விருதுநகரில் எல்லை மீறிய செயல்: நடுரோட்டில் அமர்ந்து மது குடித்த 'குடி'மகன்கள்

நடுரோட்டையே பாராக மாற்றி 2 வாலிபர்கள் மது குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மது பிரியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் சாலையில் அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கிருந்து தள்ளாடியபடி சென்றனர்.
விருதுநகர் பழைய பஸ் நிலைய ரோட்டில் அமர்ந்து மது குடிக்கும் ‘குடி’மகன்கள்
விருதுநகர் பழைய பஸ் நிலைய ரோட்டில் அமர்ந்து மது குடிக்கும் ‘குடி’மகன்கள்
Published on

விருதுநகர்:

மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து அன்றாடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் நாள்தோறும் மதுகுடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல் வீதிக்குவீதி டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மதுபோதையில் வாழ்க்கையை தொலைத்து உடல் நலத்தையும் காக்க முடியாமல் பலர் ஆஸ்பத்திரிகளிலும், நலவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெறுவதை காணலாம். மது பழக்கத்தை கைவிட வேண்டும் என அறிவுறுத்தினாலும் 'குடி' மகன்கள் அதனை கண்டு கொள்வதில்லை.

இந்தநிலையில் நடுரோட்டையே பாராக மாற்றி 2 வாலிபர்கள் மது குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று இரவு 2 பேர் மது வாங்கினர். அவர்கள் பாரில் அமர்ந்து மது குடிக்காமல் திடீரென கடை எதிரே உள்ள சாலையில் நடுவே அமர்ந்து மது குடித்தனர். வாகன, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஊர் கதையை பேசி குடிமகன்கள் 2 பேர் மது குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை ஆச்சரியத்துடன் சிறிது நேரம் பார்த்து விட்டு சென்றனர். சிலர் அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தும் மது பிரியர்கள் அதை கண்டு கொள்ளாமல் மது குடிப்பதில் ஆர்வமாக இருந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை. வாகன சோதனை, சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு வேகமாக வந்து கவனிக்கும் போலீசார் இதற்கு எந்தவித தீவிரமும் காட்டவில்லை. மது பிரியர்கள் 1 மணி நேரத்திற்கும் மேல் சாலையில் அமர்ந்து மது குடித்துவிட்டு அங்கிருந்து தள்ளாடியபடி சென்றனர்.

இந்த சம்பவம் விருதுநகர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் மது குடித்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் சாலைகள் அனைத்தும் மது கூடங்களாக மாறிவிடும் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com