search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

    • சென்னை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது
    • ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    ஆனால் அவருக்கு அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் உடனடியாக விசாரணை நடத்த இயலாத நிலை இருந்தது.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றனர். அதன்படி அவரிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையையும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அங்கு அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதாடினார்.

    வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் 10 ஆண்டுகள் வங்கிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். வருமான வரி கணக்குகளையும் தாக்கல் செய்துள்ளார். இதில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகிறது. எனவே, இந்த வழக்கில் அவர் உள்நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், "செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

    மேலும் சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற நிலை ஏற்படவில்லை.

    செந்தில் பாலாஜியின் கால் மரத்துப்போவது போன்ற நிலை சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளிலும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, இந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார்" என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×