search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீரவநல்லூரில் தொழிலதிபர் கொலையில் 5 வாலிபர்கள் கைது
    X

    வீரவநல்லூரில் தொழிலதிபர் கொலையில் 5 வாலிபர்கள் கைது

    • முக்கிய கொலையாளியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
    • வீரவநல்லூர் பகுதியில் நடந்த ஒரு கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் 1-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பண்ணையார் குமார் என்ற அருணாசலகுமார் (வயது 42). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் செங்கல் சூளையும் நடத்தி வந்தார். மேலும், பொக்லைன் எந்திரங்கள், டிராக்டர் உள்ளிட்டவற்றை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார்.

    இவருடைய மனைவி துர்க்கா தேவி. இவர்களுக்கு கருப்பசாமி, முருகன் ஆகிய 2 மகன்களும், மனிஷா என்ற மகளும் உள்ளனர். நேற்று மாலை அவர் வீற்றிருந்தான்குளம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 5 மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 மோட்டார் சைக்கிள்களில் பின்தொட ர்ந்து விரட்டிச் சென்றனர்.

    உடனே அருணாசலகுமார் செல்போனில் தனது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவாறே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு காட்டுப்பகுதியில் தப்பியோடவே, அந்த கும்பல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    தகவல் அறிந்த சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபகுமார் மற்றும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருணாசலகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீரவநல்லூர் யாதவர் தெருவை சேர்ந்த கார்த்திக்(24) என்பவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    முக்கிய கொலையாளியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் கார்த்திக்கை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதால், அவரது பெற்றோர் கார்த்திக் குறித்து சிலரிடம் விசாரித்துள்ளனர்.

    அதேபோல் தற்போது கொலை செய்யப்பட்ட அருணாசல குமாரிடமும் விசாரித்துள்ளனர். அதற்கு கார்த்திக் குடிப்பழக்கம் உள்ளவர் என்று அருணாசல குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை இளம்பெண் தனது காதலரான கார்த்திக்கிடம் கூறிவிட்டார். இதனால் அருணாசலகுமார் மீது கார்த்திக் ஆத்திரம் அடைந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீரவநல்லூர் பகுதியில் நடந்த ஒரு கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை அருணாசலகுமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனாலும் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(21), முத்துராஜ்(19), வசந்த்(21), கொம்பையா(23) ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்திக் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்டு கொலைக்கான காரணங்கள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×