search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வரும் பழங்கால நினைவு சின்னங்கள்
    X

    வருசநாடு அருகே காணப்படும் நடுகல் மற்றும் பழங்கால கற்சிலைகள் - சிதிலமடைந்துள்ள பாறை ஓவியங்கள்.

    தேனி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வரும் பழங்கால நினைவு சின்னங்கள்

    • பாறை ஓவியங்களில் தமிழர்களின் வாழ்வியல் முறை, போர் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
    • சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த பல்வேறு தகவல்கள் இப்பகுதியில் புதைந்து கிடக்கிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் பழமையான பகுதிகளில் ஒன்றாக வருசநாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் தொடர்ந்து வசித்து வந்திருப்பதற்கான தொல் எச்சங்கள் பரவலாக காணப்படுகின்றன.

    குறிப்பாக புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகிய காலகட்டங்களில் மக்கள் அடர்த்தியாக இப்பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இங்கு காணப்படும் பாறை ஓவியங்களும், நெடுங்கற்கள், கல்வட்டம், கற்பதுக்கை, முதுமக்கள் தாழி போன்றவை உள்ளன.

    பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் ஒன்றாக கற்பதுகையுடனான குத்துக்கல் அமைப்பு தமிழ் நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத அளவு இப்பகுதியில் வெம்பூர் கிராமத்திற்கு அருகே கல்லாதிபுரத்தில் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பலநூறு நெடுங்கல் தூண்கள் இருந்தன. அவை அனைத்தும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், தகர்த்து அப்புறப்படுத்தப்பட்டு, விளைநிலமாக மாற்றப்பட்டிருக்கிறது.

    இது மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்த பெருங்கற்கால, புதிய கற்கால நினைவு சின்னங்களை நாள்தோறும் சிதைத்தும் அழித்தும் வருகின்றனர். வருசநாட்டின் பெருமையை மட்டுமின்றி, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றக்கூடிய தொல் நினைவுச் சின்னங்களை, தொல்லியல் துறை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பகுதியை ஆவணம் செய்து அகழாய்வு செய்திட வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் என்பவர் கூறுகையில், வருசநாடு அருகே உள்ள வெம்பூர் பகுதியில் உள்ள நடுகல் தமிழகத்திலேயே மிக உயரமான கல்லாகும். சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து இந்த கல் உள்ளது. இது ஆவண படுத்தப்பட்டதற்கான சான்றும் உள்ளது.

    ஆனால் பராமரிப்பின்றி இருப்பதால் இதனை பாதுகாக்க வேண்டும். மேலும் தங்கம்மாள்புரத்தில் பொட்டி அம்மன் கோவில் தற்போது சிவன் கோவில் என அழைக்கப்படுகிறது. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து காணப்படுகிறது. இந்த கோவிலில் இருந்த பழமையான கற்களை பொதுமக்கள் தாங்கள் வீடு கட்ட எடுத்து சென்று விட்டனர்.

    மீதமுள்ள சிலைகள் மற்றும் பழமையான கற்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாண்டியர் காலத்தில் மாறவர்மனால் கடமலைக்குண்டுவில் கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. அதுவும் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

    இங்கு பாறை ஓவியங்களில் தமிழர்களின் வாழ்வியல் முறை, போர் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

    இப்பகுதியில் தேன் மற்றும் மூலிகை எடுக்க செல்லும் மக்களால் இந்த பாறை ஓவியங்கள் எரித்து, சேதப்படுத்தப்பட்டு காணப்படுகிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த பல்வேறு தகவல்கள் இப்பகுதியில் புதைந்து கிடக்கிறது. கீழடியைப் போல இங்கேயும் தொல்லியல்துறை ஆய்வு நடத்தி அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். மேலும் மீதமுள்ள சிலைகள், கல்வெட்டுகள் போன்றவற்றையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×