search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி 2 லட்சம் வாகனங்கள் சேதம்
    X

    சென்னை மழை வெள்ளத்தில் சிக்கி 2 லட்சம் வாகனங்கள் சேதம்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் கடந்த 4 நாட்களாக வெள்ளக்காடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
    • புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தினர் திணறி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போய் உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் கடந்த 4 நாட்களாக வெள்ளக்காடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளத்தில் 'பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்துள்ளன. சென்னை மாநகர பகுதிகள் மட்டுமின்றி தாம்பரம், புழல், வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களின் என்ஜினில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் சுமார் 2 லட்சம் வாகனங்கள் பழுதானது. மழை வெள்ளத்துக்கு பயந்து தங்களது வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மேடான இடங்களில் கொண்டு போய் விட்டவர்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    மேடான பகுதிகளிலும் மழைநீர் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதானது. நேற்று முன்தினம் இரவுடன் சென்னையில் மழை ஓய்ந்திருந்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது வாகனங்களை போய் பார்த்து கண்ணீர் விட்டனர். பாதுகாப்பாக நிற்கும் என நினைத்து மேடான இடங்களில் கொண்டு போய்விட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்தனர்.

    தற்போது சென்னை மாநகரில் சில இடங்களில் தண்ணீர் வடிந்துள்ள நிலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளை தேடி அலைந்து தங்களது வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மெக்கானிக் கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் வாகனங்களை உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை.

    இருப்பினும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்கும் சில மெக்கானிக்குகள் வாகனங்கள் பழுதாகி நிற்கும் இடங்களுக்கு நேரில் சென்று பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இப்படி புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தினர் திணறி வருகிறார்கள்.

    இப்படி வெள்ளத்தில் கார் சிக்கி பழுதாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மெக்கானிக் ஒருவர் கூறியதாவது:-

    தண்ணீரில் மூழ்கிய காரை உடனடியாக ஸ்டார்ட் செய்யக்கூடாது. கார் மெக்கானிக்கை அழைத்துச் சென்று காட்டி எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் மூலமாகவே கார்களை பழுது பார்த்து பின்னர் இயக்க வேண்டும். கார் கதவுகளை திறந்து வைத்து சூரிய ஒளியை உட்பக்கத்தில் விழ செய்ய வேண்டும்.

    கார் பானட்டை திறந்து வைத்து காய வைக்கலாம். காரின் உள்புறத்தை உலர்த்த வேண்டும். பிரேக்குகளில் இருந்து தண்ணீரை அகற்றி மெக்கானிக்குகளை முழுமையாக காரை ஓட்டச் செய்த பின்னரே நீங்கள் பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்படி வாகனங்கள் பழுதாகி இருக்கும் நிலையில் வீடுகளின் கீழ்த்தளத்தில் இருந்த டி.வி., வாஷிங் மெஷின், மெத்தைகள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளன.

    கீழ்த்தளங்களில் வசித்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுபோன்ற பாதிப்புகளை பெரிய அளவில் சந்தித்து கடும் சிரமத்துடன் உள்ளனர்.

    Next Story
    ×