என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

14 வயசுல நீ என்ன பண்ணிட்டு இருந்த! - வைபவ் சூர்யவன்ஷியால் இணையத்தில் வைரலான மீம்கள்
- ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்
- வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார்.
ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.
14 வயதில் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் அறிமுகமானதை தொடர்ந்து இணையத்தில் அவரை பற்றிய மீம்கள் வைரலாகின. குறிப்பாக 14 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று நெட்டிசன்கள் கிண்டலாக மீம் பகிர்ந்து வருகின்றனர்.
அதே சமயம் சென்னை அணியில் எடுக்கப்பட்ட திரிபாதி, ஹூடா போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்காத காரணத்தால் வைபவ் சூர்யவன்ஷியுடன் அந்த வீரர்களை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.






