தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரிய வீரர் - தென்கொரியா துப்பாக்கிச்சூடு

எல்லையை தாண்டி வந்த வடகொரிய வீரரை கைது செய்த தென்கொரியா ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரிய வீரர் - தென்கொரியா துப்பாக்கிச்சூடு
Published on

சியோல்:

கொரிய தீபகற்பத்தில் 1953-ம் ஆண்டு நடந்த போரைத் தொடர்ந்து, வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே சமரச உடன்படிக்கை கையெழுத்தானது.

ஆனாலும் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு மக்கள் மட்டுமல்ல, ராணுவ வீரர்களும் தப்பிச்செல்வது தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 3 வடகொரிய வீரர்கள் தென்கொரியாவுக்கு எல்லை தாண்டிச்சென்று விட்டனர். கடைசியாக கடந்த மாதம் 13-ந் தேதி ஒரு வீரர், தென்கொரியாவுக்கு எல்லை தாண்டியபோது, சக வீரர்களால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் சியோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்னும் சிகிச்சை பெறுகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வடகொரியாவில் இருந்து மேலும் ஒரு வீரர் தென்கொரியாவுக்கு அடர்ந்த பனி மூட்டத்துக்கு இடையே நைசாக தாவினார். இதை தென்கொரியாவின் ராணுவ செய்தி தொடர்பாளர் ரோ ஜே செயோன் உறுதி செய்தார்.

எல்லை தாண்டிய வடகொரிய வீரரை தென்கொரியா தனது காவலில் எடுத்துக்கொண்டது. என்ன காரணத்துக்காக அவர் எல்லை தாண்டினார் என்பது பற்றி விசாரிக்கப்படுகிறது.

19 வயதான அவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் எல்லை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தென்கொரியாவுக்கு தாவிய உடன் வடகொரிய வீரர்கள் எல்லையில் குவிந்தனர். உடனே அவர்களை எச்சரிக்கும் விதத்தில் தென்கொரிய வீரர்கள் 20 முறை சுட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com