

சென்னை:
டெல்லி மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 55 பேரின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.) மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேர் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்த காலி இடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
வேட்பு மனுக்களை பெறுவதற்கு தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர்களாக ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அறிவிக்கப்பட்டிருந்த திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் இன்று சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், கனிமொழி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ப.ரங்கநாதன், இ.கருணாநிதி, மாதவரம் சுதர்சனம் உள்பட ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.